Gnanavelli Family

Written by IRAIVAN GNANAVELI MAEIPIRAN GNANA SIDDAR


தேடுபவை யாவும் தேடுமா றமையவும்

நாடுபவை யாவும் நலமுடன்வந் தேகவும்

கூடுபவை யாவும் குணமுயர்த் திடவுமாய்

ஓடும்நாள் வாழ்வின் உன்னதம் நல்கவே.

24 September 2021


அகரதமிழ் முழங்குமிடம் ஆலயமாய் விளங்குமிடம்

பகரகுரு வாழுமிடம் படிநிலைக்கு உயர்த்துமிடம்

மகரவொளி வீசுமிடம் மரகதமாய் திகழுமிடம்

உகரமுயிர் உய்யுதற்கு ஞானவெளி ஆனந்தபீடம்.

22 September 2021


உள்ளம் படுதுயரம் உனைவிட் டோடுமினி

கள்ள மலக்கூட்டம் கருத்தவிழ்ந்து விலகுமினி

வெள்ளம் வினைநீக்க விரைந்துவந் துதவுமினி

அள்ளக் குறையாத அமுதூறும் அகந்தெளிய.

21 September 2021


நன்றுசெய் நல்லோர் வழிபார்த்து தானஞ்செய்

அன்றுசெய் வினைக்கு ஆவனசெய் அறஞ்செய்

இன்றேசெய் இன்முகத் தோடுதொண்டு குருவழியில்

நின்றுசெய் நித்திலத்தில் நிம்மதிக்கு நீவிரைந்தே.

20 September 2021


நலமும் வளமும் நட்புசூழ் உறவும்

பலமும் பணமும் பகையிலா வாழ்வும்

நிலமும் நித்திரை சுகமும் நிம்மதியும்

விலகா திருக்க மெஞ்ஞானம் ஆள்கவே.

19 September 2021


அன்பு வேண்டும் அன்பே வேண்டும்

அன்பன்றி ஏதுவேண்டும் அன்பிலா துயிரும்

துன்பிலே மாட்டுமே துயர்வந்து கூட்டுமே

இன்பிலா இறப்பிலே இனிபோகா திருக்கவே.

18 September 2021


அன்பு வேண்டும் அன்பே வேண்டும்

அன்பன்றி ஏதுவேண்டும் அன்பிலா துயிரும்

துன்பிலே மாட்டுமே துயர்வந்து கூட்டுமே

இன்பிலா இறப்பிலே இனிபோகா திருக்கவே.

18 September 2021


கழிந்தது கர்மா கருணையின் துணையால்

வழிந்தது பெருமான் ஆசியோ விழியால்

இழிந்தது எல்லாம் இல்லாதே யொழிந்தது

அழிந்தது ஆகாத தென்றகங் குளிருமே.

17 September 2021


போகும் இனிதுயரம் பொல்லாப்பு வினையாவும்

சாகும் மமதையொடு ஆணவக் கன்மந்தான்

நோகும் நிலைமாறி நித்தியத்தின் வாசமொடு

ஆகும் அஞ்சொடு ஒன்பதின் ஆற்றலுமே.

16 September 2021


வான்பேசும் வளர்மதி பேசும் வன்னியுந்

தான்பேசும் தாலாட்டுந் தென்றலும் பேசும்

வானிறங்கும் நீர்பேசும் நிலம்பேசும் கதிர்பேசும்

யானமைத்தக் குடும்பத்தை யாவரும் போற்றுவரே.

9 September 2021


ஆதியில் அந்தம் அந்தத்தில் ஆதி

நீதியும் பிழையும் விதிப்படி விளையும்

ஓதியும் உதவா மறையும் உளவே

வேதியர் உயர்வு ஒழுக்கத் துறைவே.

24 June 2021


நன்றுந் தீதும் நானறிய தாயுரைத்தாள்

முன்னைசெய் வினைவந்து அலைபாய விட்டதெனை

என்றிதற்கு விடிவென்று மனந்தேட மார்க்கத்தை

ஒன்றியுனை யல்லால் பெறவரிதென் றுணர்ந்தனனே.

23 June 2021


நாளொன்று வீழ நமன்வந்து சேர

ஆளெல்லாம் கூட திரும்பாமல் செல்ல

வாளென்று அழுதார் வாளா திருக்க

தேள்வந்து கொட்ட தெளிவிப்பாய் என்குருவே

21 June 2021


அறியா பேர்க்கு அதுஒரு மாயை

அறிந்துணர்ந் தோர்க்கு அதுதான் லீலை

குறியாய்த் தேடி குவலயத் தலைவார்

முறையாய் குருவைப் பற்றிட வருமே

17 June 2021


இனியொரு பிறப்பிலை இனிதுயர் உனக்கிலை

இனிவரு நாளெலாம் இன்பிற்கு குறைவிலை

இனிமனம் அடங்கிட இறைமணங் கமழ்ந்திட

இனியுள நாள்மட்டும் இறைத்தொண்டே உன்தொண்டு.

16 June 2021


நான் கண்ணாடி உன்னை என்னில்காண்

நான் மெய்யறிவு என்னை உன்னில்காண்

நான் உருவம் அருவத்தின் அடையாளம்

நான் உயிர்ப்பொருள் உடல்காக்க என்னைசேர்.

15 June 2021


தொடுவார்த் தொட்டால் குறைகழன் றோடும்

படும்வினை யாவும்

பறந்தழிந் தோடும்

நடந்ததும் நடப்பதும்

நடுகண் அறியும்

திடமுடன் குருவழி

தொடர்பவர் தமக்கே

14 June 2021


ஒருநாளா விருநாளா ஒவ்வொரு நாளுந்தன்

விருகண்ணை மூடியுனை நினைக்காத பொழுதில்லை

மருந்தானாய் வினைக்கு மனமாறி அருள்தேட

விருந்தானாய் துணையானாய் ஞானவெளி அடியருக்கே.

8 June 2021


வேண்டுதற் கேதுளது யாவும்நீ அறிவயென்

ஆண்டே இனிபிறப்பில் சிக்காதுன் சீரடிக்கண்

யாண்டும் இரும்பேறு போதுமல்லால் உளவரைக்கும்

தூண்டும் மனமொடுங்கி செய்வேனுன் தொண்டு.

6 June 2021


வேண்டுதற் கேதுளது யாவும்நீ அறிவயென்

ஆண்டேயுன் அடிவீழ்ந்தேன் ஆதரிப்பாய் அகபுறத்தை

தூண்டும் மனவிச்சை துவண்டுமெய் ஞானத்தில்

யாண்டும் இறைவாசத் தோடிருந்தால் போதும்.

5 June 2021


உணர்த்தும் நிலையுனது உணரும் நிலையெனது

கணக்கைக் கைக்கொண்ட கர்மா மிகப்பெரிது

இணக்கம் நமக்குள்வர இல்லை துயரெனக்கு

வணக்கம் உனக்கல்லால் மண்ணில் எவர்க்குரித்து.

3 June 2021


ஆர்க்குரைப்பேன் ஆரறிவேன் ஆறுதலெங் கடைவேன்

சீர்த்தியுற சித்தம்நீ கொளவிலையேல் சீரழிவேன்

நேர்த்தியுற நித்தம்நான் நிம்மதியை நாடுகிறேன்

பார்த்தருள்வாய் பரனேநீ பழவினை யுணர்ந்தமனனே.

2 June 2021


தந்தநாளை தான்திரும்ப பெறவிரும்பான் தந்தான்

வந்தநாளை வாய்ப்பிதுவென் றேநினைப்பான் நல்லான்

இந்தநாளை இன்பமுற வாழுதற்குப் பல்லுயிரைச்

சொந்தமாக எண்ணிடுமின் சோகமில்லை சுகமே

31 may 2021


தன்மனம் சொல்வதோ தானுற்ற கர்மாவால்

தன்னறிவு என்பதுவும் மனம்பெற்ற மாற்றந்தான்

இன்னுமிதை உணரார்க்கு விடிவேது உயர்வேது்

தன்னை வழிநடத்த குருவந்தால் தெளிவாமே.

22 may 2021


பொய்தீண்டா நெஞ்சுடையார்

பெறுவதெலாம் தானடைவர்

மெய்தீண்டா வாக்குடையார்

மேதினிக்குப் பழியாவார்

செய்வதுவும் சொல்வதுவும்

இழுக்குற்றால் இழிவடைவர்

உய்யமனம் வேண்டிநின்றார்

உறைந்திடுக உண்மையுளே.

21 may 2021


ஒன்றே பலவாகி பலவின்று ஒவ்வொன்றாய்

அன்றே கொண்டவினை அணைந்துவந் தாள்வதனை

நன்றே உள்ளுணர்ந்து நாமெல்லாம் ஒன்றென்றால்

அன்றே வினைபோகும் அண்டம்வருங் காலடிக்கே.

20 may 2021


வினைகழற்ற வந்தவெனை விரட்டிவந்த புதுவினைகள்

வனைத்தெடுத்து மாற்றியதை வாயுரைக்க வல்லேனே

தினையளவு செய்தபலன் தெரிகிறது இறைநினைவில்

எனைமறந்து வாழுகிறேன் என்றென்றும் உன்னடிக்கே.

19 may 2021


வினைகழற்ற வந்தவெனை விரட்டிவந்த புதுவினைகள்

வனைத்தெடுத்து மாற்றியதை வாயுரைக்க வல்லேனே

தினையளவு செய்தபலன் தெரிகிறது இறைநினைவில்

எனைமறந்து வாழுகிறேன் என்றென்றும் உன்னடிக்கே.

19 may 2021


வேண்டுதல் வேண்டாமென் றேயிடித் துரைத்து

யாண்டுமுன் பொன்னடிக்கண் சிந்தைவைத் திருக்கவும்

மூண்டெழும் கர்மாவை முழுதுமா யோட்டவும்

தூண்டினை குருவாகி ஞானவெளி யன்பருக்கே.

18 may 2021


எப்பிறப்பு புண்ணியமோ எனக்கிங்கு வாய்த்துளது

அப்பாவுன் அடிக்கேநான் ஆளாகிப் போனேனே

தப்பினிமேல் வாராது தடுத்தென்னைக் காத்திடுவாய்

ஒப்பில்லா தத்துவனே இறையே என்குருவே.

17 may 2021


எண்ணிய வாறெல்லாங் கூடுமென் றெண்ணி

திண்ணிய ராயுன் திருத்தாள் பணிந்தோம்

கண்ணிமை யுள்ளிருந்து காக்குமுன் கருணைக்கு

மண்ணிமை மூடுவரை மறவோம் மறவோமே.

16 may 2021


கொண்டு வந்ததை விட்டுச் சென்றிட

கண்டுச் சொல்பவர் யாரெனக் கேட்க

பண்டை அறிந்தயெம் பரனென வீழ

முண்டி உதவினன் ஞானவெளி யன்பருக்கே.

15 may 2021


பேசா எழுத்தறிந்து பேசுகிற வித்தையை

ஆசா னாயிருந்து அறிவிப்பாய் என்தனுக்கே

ஈசா நீஇருக்கும் இடமறிய வல்லார்க்கு

கூசா மலேயவர் குறைகளைவாய் என்குருவே

14 may 2021


பெற்றதாய் யன்பும் பேணிடுந் தந்தைபோல்

பற்றுவைத் தேகாக்கும் பரனேயுன் பொன்னடிக்கு

இற்றையிப் பிறப்பன்று இனியுள திலெல்லாம்

சற்றுஞ் சளைக்காது சரணிட்டுக் கிடப்பேனே.

13 may 2021


பட்டதுய ரெல்லாம் போதுமினி வாராது

துட்டர் தொடர்புமினி தொந்தரவு தாராது

விட்டகுறை தீர்ந்து பிறப்புமினி அமையாது

இட்டமுடன் இணைந்த ஞானவெளி அன்பருக்கே.

12 may 2021


பண்டிருந்த வினையைப் பாழாக்க வந்தும்

உண்டுடுத்து உறங்கி உல்லாசங் கழித்தும்

கொண்டதினும் மேலாய் பெருக்க விடிவேது

தொண்டொன்றே மருந்தென்று செய்வீர் விரைந்து

10 may 2021


ஒட்டிக் கொண்டவினை உடனிருந் துழற்றுவதை

சுட்டிக் காட்டிமனம் சுதந்தரித்துக் கொள்ளுதற்கு

கொட்டிக் கொடுத்தாய் உபதேசம் வேதமுடன்

எட்டி நிற்காது என்றென்று முயிருனையே.

9 may 2021


உருகி வேண்டினும் உணர வியலாத

கருவில் மூடிய என்தனி மந்திரம்

அருகில் வந்திட காதில் உரைத்தனை

உருவம் பெற்றதன் பயனுணர்ந் தனனே.

8 may 2021


எங்குளா யென்று எண்ணித் திரிவார்க்குள்

இங்குளா யென்று இதயத்தே கண்வைத்து

பொங்குமருள் கண்டுகண்டு பேறுற்றோம் உயிரும்

தங்குமென் தனிமந்த்ரம் தீட்சைதந் தணைத்தனையே

7 may 2021


சிந்தையில் ஒளியும் செயலில் பலிதமும்

முந்தை வினைக்கு முடிவிங் கமையவும்

எந்தை பிரானின் மெஞ்ஞானம் உதவவும்

வந்திங்கு பெற்றனர் ஞானவெளி அடியரே.

6 may 2021


நம்பினார் யாவருக்கும் நல்லருளே பாலித்து

வம்பிலா வாழ்வமைத்து வளம்யாவும் சேர்ப்பித்து

தம்பிரான் தன்னருளால் தவயோகம் கூடவைத்து

இம்மைக்கும் மறுமைக்கும் ஞானவெளி அருளிடுமே.

5 may 2021


கரங்குவிப்பார் தம்மனத்து கருணைக்கா ளானேன்

சிரந்தாழ்த்தும் சிந்தனையார் சொல்லில்வடி வானேன்

தரந்தாழ்த்தித் தெண்டனிட்டார் அன்பிலுயி ரானேன்

பரமென்று பகர்ந்தென்னுள் பயணிப்பார் நானே.

4 may 2021


நின்நலம் நின்வசம் ஆனதால் என்றுமே

நின்குணம் நற்குணம் ஆகுதல் தேவையே

நின்செயல் தரும்பலம் அல்லவோ பிறவிக்கு

நினையாட் படுத்துமா றுள்ளதை உணர்மினே.

3 may 2021


அழுதால் வினைதீரக் கூடுமெனில் அழுவேன்

தொழுதால் படியேற முடியுமெனில் தொழுவேன்

விழுதாய் உனக்கிருக்கக் கூடுமெனில் விழுவேன்

கழுவாய் காட்டுமுந்தன் கருணைக்கு ஆளானேன்.

2 may 2021


துதிப்பார்க்கு நலமருளும் தூமணியே என்றும்

மதிப்பார்க்கு மதியருளும் மாமறையே மண்ணில்

சதிப்பாரை சாய்த்துவிடு சஞ்சலத்தை ஓட்டிவிடு

எதிர்ப்பாரே இல்லா நிம்மதியைத் தாவிறையே.

1 may 2021


எத்தனைப் பிறப்புற்றேன் ஏதவத்தைப் பட்டேன்

அத்தனையு மறியுமுன் பொன்னடிக்கண் வீழ்ந்தேன்

சித்தமுற்று என்வினைக்கு விடிவளிக்கும் பெம்மானே

அத்தனே இனிபிறப்பு வேண்டேன் அருளுகவே.

30 April 2021


தாயும் தந்தையும் தவமுற்ற குருபரனும்

நீயென்று கொண்டுமனம் நிம்மதியில் ஆழ்ந்திருக்க

நோயும் வருமோ நின்வேத பாடத்தை

ஓயாது ஓதுமிந்த ஞானவெளி அடியருக்கே.

29 April 2021


இங்கமைவ தெல்லாம் இதற்குமுன் தேடினதோ

எங்குருநீ எடுத்துரைக்கா தேதுணர்வேன் மண்ணில்

தங்குமட்டும் தடையிலா நின்நினை வொன்றுபோதும்

பொங்குமருள் ஞானவெளி துணையுன்டு எனக்கே.

28 April 2021


நீங்கா நினைவுநின்

நினைவாகும் வண்ணம்

தூங்காதே தொடரும்

துணிவெனக் கருளேன்

ஆங்காரத் தோடலையும்

அறிவிலிக்கு அகத்தொளியை

ரீங்காரத் தோடெழுப்பி

முத்தியிடு வென்னிறையே.

27 April 2021


ஆதியே ஆனந்த பீடத் தரசே

சோதியே வினைமாற்ற வந்த குருவே

நீதியே உயிர்க்கெலாம் நித்தியப் பொருளே

போதித்து மீட்பாய் ஞானவெளி அடியருக்கே.

26 April 2021


ஒருவாய் திறந்து இறைவா என்றிட

குருவாய் வந்துஎன் குணந்தனை மாற்றினை

திருவாய் மலர்ந்து வேதமும் மந்த்ரமும்

கருவாய் அடைக்கநீ தந்தையே போற்றி.

25 April 2021


நோயிலா வாழ்வும் பகையிலா உறவும்

கோயிலாய் வீடும் குறைவிலா வளமும்

தோய்விலா வளர்ச்சியும் தொண்டிலே மகிழ்ச்சியும்

தாயெனச் செய்யும் ஞானவெளி யன்பருக்கே.

24 April 2021


பொன்பொருள் சேரும் புனிதமுங் கூடும்

தன்னறிவுத் துலங்கும் தவம்வந் தேகும்

இன்பமே இல்லத்தில் இனியென்று மோங்கும்

அன்புடன் ஞானவெளி அடியரா னவர்க்கே.

23 April 2021


யாதெனைத் தொட்டதோ ஊரார்கண் பட்டதோ

தீதெனைச் சுட்டதோ தெளிவிலா பூதத்தால்

வேதனை உற்றதோ உறவுவழி வந்ததோ

நாதனுன் நல்லடியே நாளுமென் காவலாமே.

22 April 2021


உளநாள் வரைக்கும்

உயிரின் உறவாய்

விளங்கா புதிரை

அவிழ்க்கும் அறிவாய்

பலகால் தொடரும்

பிறப்பின் முடிவாய்

நிலமேல் எனக்கு

நீயே போற்றி.

21 April 2021


என்றோ செய்ததோ ஏதுநான் செய்ததோ

இன்றொன்று மறிகிலேன் ஆயினும் என்செய்வேன்

நன்றே செய்யும் நாதனுன் அடிக்கே

அன்புசெய் தமைந்தேன் அருள்வதுன் கடனே.

20 April 2021


பெற்றப் பேறிதுவோ பிழை
விட்டுக் கழன்றதுவோ குறை

அற்று அகன்றதுவோ நிறை
ஒட்டிக் கொண்டதுவோ மனம்

கற்றுத் தெளிந்ததுவோ பகை
காற்றில் பறந்ததுவோ ஞானம்

முற்றும் நிலையிதுவோ இனி
மண்ணில் பிறப்பிலையோ.

19 April 2021


அற்றது வினையென அறிந்தது நெஞ்சகம்

கற்றதுக் கரைந்ததால் கலைந்தது வஞ்சகம்

பெற்றதுப் பேறென வீழ்ந்தனம் உன்வசம்

உற்றது உயிர்துணை உடையவன் நீயே.

வாழ்வோம் வாழ்விப்போம் என்றும்

வாழ்வோம் வாழ்விப்போம்.

18 April 2021


அஞ்சுதல் வேண்டாம் நெஞ்சே
ஆறுதல் குருவின் அடியே

வஞ்சகர் வாசம் விட்டே
வாழ்நாள் முழுதும் தொண்டே

செஞ்சிடும் வன்மை வேண்டும்
செயலிலே தூய்மை வேண்டும்

தஞ்சமாய் வந்த மண்ணில்
தவத்துடன் மீள வேண்டும்.

17 April 2021


வழியுண்டு மண்ணில் வாழ்வாங்கு வாழ

விழிகொண்டு உணர்வார்க்கு விதிதன்னை வெல்ல

பழிநீக்கி பகைபோக்கி உறவெல்லாம் சூழ

அழிவில்லை அறம்கூட்ட அடியாராய் விடுமே.

16 April 2021


மண்ணில் ஒழுக்கமே மனிதனுக் கறிகுறி

எண்ணில் பிழையுறா வண்ணம் வாழ்மின்

கண்ணில் கருணையும் மனதில் தூய்மையும்

விண்ணில் தெய்வமாய் வாழ உதவுமே.

15 April 2021


நின்னதை என்னதாய்க் கொண்டும்

என்னதே நின்னதாய் எண்ணும்

பொய்மையை விட்டு மீண்டு

மெய்மையில் வாழும் வண்ணம்

நின்மனம் இரங்கினா லன்றி

எனக்கிங் கீடே தில்லை

அன்பினில் உருகி உருகி

உன்னடி கிடப்பன் யானே.

14 April 2021


அத்தனை சித்தனை ஆனந்த கூத்தனை

முத்தனை முதல்வனை முழுமறை வேந்தனை

இத்தரை உளவரை இதயத் திருத்திட

சத்தியம் இனியொரு பிறப்பிங் கிலையே.

13 April 2021


பொய்யழகை மெய்யழகாய்ப் பேணிவாழு வோர்கள்

பொய்விட்டு வெளிவந்தால் புனிதமாகு வார்கள்

பொய்விட்டு வெளியேற குருவினருள் வேண்டும்

பொய்யில்லா மெய்யினர்க்கே குருகிடைக்கு மாமே.

12 April 2021


ஆகாத தேதோ வதைநீக்கி நெஞ்சினுக்கு

சாகாதக் கல்வி புகட்டுங்கால் நோகாது

ஆகாய மொன்றே அடைக்கலமாய்க் கொண்டுலகில்

ஏகாந்த மாயிருக்க ஏற்பு.

11 April 2021


மனமே உனக்கு வாழ்வுண்டு மண்ணில்

இனமே இனிமாறும் தெய்வாம்ச நிலையில்

கணமேனும் கடத்தாது தெளிவாய் மெய்யில்

குணமாற வழியுண்டு ஞானவெளி தொடர்பில்

10 April 2021


போனவழி யெல்லாம் புகட்டாத வித்தையை

ஞானவெளி காட்டும் அறிவுற ஆனதெல்லாம்

மோனநிலை யாக்கி வருநாளில் சீர்த்தியுடன்

வானதெய்வ மாக்கும் மகிழ்ந்து.

9 April 2021


நல்லது ஒன்றே நமக்குகந்த தென்று

அல்லது அகற்றி குருவழி நடந்தால்

சொல்லா வாக்கையும் செல்வாக் காக்கி

கல்லா வித்தையுங் கைகூட வைப்பார்.

8 April 2021


உப்பில்லா பண்டத்தில் சுவைமுற்ற வழியுண்டோ

அப்பில்லா அழுக்கோட்டி சுத்தமுற்றப் பேருண்டோ

தப்பில்லா தவவாழ்வை பொய்யுற்றார் பெறுவதுண்டோ

எப்பவுமே அன்பொன்றே முழுமைக்குப் புள்ளிமுற்று.

7 April 2021


என்னுளத்தில் பொங்குவது நின்கருணை ஜுவவூற்றே

தன்னுளமாய் தங்கினாயே அதுயான் பெற்றபேறே

இன்னுமொரு பிறவிவாரா வண்ணம் என்னை

அன்பினில் ஆழ்த்தி வினைநீக்கி ஆட்கொள்ளேன்.

6 April 2021


பாடும் நிலைவந்தால் பாவங் கரைந்தோடும்

தேடும் மனங்கொண்டால் தெய்வம் உறவாகும்

கூடும் அடியார்க்கு உதவக் குறைபோகும்

நாடும் நெஞ்சென்றும் நடுநிற்க நலமே

5 April 2021


தன்புத்தி எழும்போது தந்தை உதவான்

பின்புத்தி சேர்ந்தப்போ தாயும் உதவாள்

முன்புத்தி யால்மூண்ட மனத்தை அடக்க

அன்புத்தி யால்குரு அறிவை சேர்க்க.

4 April 2021


தாய்குருதி தந்தைபுனல் ஆசான் ஆவி

ஆய்ந்தநடு புருவத்தே தெய்வம் ஊன்றி

ஓய்ந்தடங்கிப் போகும்முன் ஓர்ந்து தேர்ந்தார்

காய்ந்துசரு காவதில்லை கற்பக விருட்சமாம்

3 April 2021


எல்லாரும் நல்லவரே என்றெண்ணி வாழுங்கால்

பொல்லாங்கு வாராது பொய்யொழித்த நெஞ்சினராய்

இல்லாரை இகழாது இடர்தருவோர் வழிநோக்கிச்

செல்லாது சோம்பாது இருத்தலே சிறப்பு.

2 April 2021


இற்றைநாள் துயர்கண்டு இடிந்துளம் போகாது

அற்றைநாள் வினைப்பயனே எனக்கூர்ந்து உறுதியுடன்

சற்றுமறந் தவறாது சகிப்புடன் வாழுங்கால்

மற்றுமொரு வாழ்வுண்டு விண்ணேறும் நிலையே.

1 April 2021


நன்றென்று நாடுரைத்தப் பொருளொன்றும் நலமில்லை

ஒன்றென்று உணர்தற்கு உலகெங்கும் வழியில்லை

இன்பென்று சார்வதெலாம் துன்பென்று தொடருவதால்

என்றென்றும் நிலைத்ததனை எடுத்துரைப்பாய் என்குருவே.

31 March 2021


ஒருவாய்ப் பசிக்கு உருவாய் கொடுத்தால்

கருவாய் அடைக்கும் கதிவந் தேகும்

திருவாய்த் திறந்து குருவாய் மொழிந்தால்

அருவாய் அடங்கும் வானிலை தானே.

30 March 2021


ஆதியான ஒன்றினை அடையவேண்டி துடித்திடில்

பேதியான பொருட்களை பித்தமென்று ஒதுக்கியே

நீதியான நெறிவழி நிமிர்ந்துநின்று வாழ்ந்திட

சோதியான குருபதம் சொந்தமாக்கி கொள்ளுமே.

29 March 2021


தொட்டது துலங்கும் தொடர்ந்தருள் நிலைக்கும்

கெட்டது விலகும் கெடுமதி ஒழியும்

விட்டது கிடைக்கும் விரைந்தெழில் தழைக்கும்

இட்டமாய் குருவை இருத்திட நெஞ்சிலே

28 March 2021


விட்டகுறை தீர்தற்கு வந்தபின் நொந்தெதற்கு

பட்டகடன் தீர்த்து பழிமாற்றி இட்டமுடன்

அட்டசித் தெய்துவண்ணம் நற்றவத்தார் சொன்னபடி

தொட்டவர் கால்பணிந்து வாழ்.

27 March 2021


நாளொன்று உண்டென்று நம்பிவாழும் வாழ்விதனில்

கோள்வந்து செய்வதனை கண்ணறியோம் வாளா

விருப்பதனால் ஏதிங்கு கூடுமென் றாய்ந்து

விருப்ப முடன்செய்வோம் தொண்டு.

26 March 2021


ஒன்பொருளாய் எண்ணி கொள்க ஞானத்தை

தன்பொருளாய் தவங்கூடும் தத்துவம் புலனாகும்

இன்பிருந்த இடத்தில் ஊற்றுப் பீச்செடுக்கும்

அன்பிருந்த அகமோ அண்டத்தைத் தாண்டிநிற்கும்.

25 March 2021


ஆசை வருங்கோடி ஆயினுமென் செய்வோமென்

றோசை படாதிருக்கக் கற்றார்க்கு காசைப்

பெரிதென்று எண்ணுமனம் மாறி திடமாய்

உரியோன்பால் நிற்கும் நிலைத்து.

24 March 2021


முன்னை வினைமூண்டு வந்த கதையிதனை

அன்னை மனங்கூட ஆயாதே இன்னுந்தான்

பின்னை வருநிலையைப் பாராது வாழுவதோ

தன்னை உணரவழித் தேடு.

23 March 2021


நல்ல கல்வியும் நடுநீங்கா செல்வமும்

சொல்லத் தகுஞ்சிறப்பும் சொல்விளங்கும் மேன்மையும்

இல்லை என்றுரைக்கா வளமையும் வாய்ப்பும்

நல்லார் புடைசூழ நாளும் நிலைக்கவே.

22 March 2021


இன்சொல்லும் பொய்யில்லா நெஞ்சும் அவைக்கஞ்சா

தன்னறிவுத் தூவொளியும் தான்பிறழா மென்குணமும்

என்றும் குறைவில்லா பல்வளமும் பெற்றிருப்பீர்

அன்பே யகத்துள் நிறைத்து.

21 March 2021


வேண்டும் நலம்யாவும் வந்தெய் திடவுமருள்

தூண்டும் குருஞானம் குன்றாது யாண்டும்

தரணியிலே தொண்டே விடிவென்றுக் கொண்டு

திரணியுடன் நிற்பீர் நிலைத்து.

20 March 2021


வானுண்டு வளமுண்டு வாழ்விக்க பூதமுண்டு

தானுண்டு தவமுண்டு என்றெண்ணித் தாரணியில்

பொய்யின்றி வாழும்போழ் தீதின்றி விதிவென்று

மெய்க்கொண்டு விண்ணேற வழிவந்து சேராதோ.

19 March 2021


இல்லறமே இனிதென்று இசைந்துமனங் கோணாது

நல்லறத்தைப் பேணுவோர்க்கு நாளில் பயமில்லை

அல்லல் வாரா அடுத்துபகைச் செய்வோரும்

இல்லா தொழிந்திடுவர் இருப்பீர்நீர் மகிழ்ந்தே.

18 March 2021


தோற்றம் மாறலாம்

நினைவு மாறாது

வீதியில் ஓடியாடிய நாட்களை

விதி முடித்து வைக்கலாம்

ஒன்றாக பள்ளிக்குச் சென்றதும்

என் முதல் நூல் வெளியீட்டு விழாவில்

தோள் கொடுத்து நின்றதும்

அந்திமத்தைத் தொடும்நேரம்

தேடிவந்து என் ஞான அமுதங்கள்

முதல் பிரதியை பெற்று மறைந்ததும்

முகம் மறைந்த பின்னிந்த

முகநூலில் சொல்லத்தானோ?

17 March 2021


ஆட்டுவிப்பான் ஆரென் ற்றியாமல் ஆடுவோரை

பாட்டுவித்தால் என்செய்வர் பாடறியார் கூட்டுவித்து

ஊட்டுவித்தால் உள்ளக் கனல்மூண் டெழும்பாதோ

வீட்டுப் புறமொதுங்கத் தான்

16 March 2021


வாழ்வோம் வாழ்விப்போம்.

ஞானக் கல்வியில் தேர்ந்திடணும் பிறர்

ஞானம் பெற்றிட உதவிடணும் தம்பி

வானம் வசப்பட வாழ்ந்திடணும் இந்த

வையம் உளவரை நிலைத்திடணும்

1 March 2021


வாழ்வோம் வாழ்விப்போம்.

பிறந்த நாள்காணும் பெண்ணேநீ

பெருமைப் பெற்று வாழ்தற்கு

உகந்த வழிகள் இதிலுண்டு

உணர்ந்து கற்றால் புகழுண்டு

அறத்தைப் பேணிப் போற்றுதற்கு

ஞானக்கல்வித் துணையுண்டு

அகிலம் உன்னைத் தொடர்தற்கு

அன்பும் அறிவும் அடைவாயே.

1 March 2021

7

Steps for your Success

24/7

Connectivity with Master