உள்ளே....
ஞானப் பார்வைக்கு
ஞானக் கல்வி கற்றிடு இந்த
ஞாலம் உயர்ந்திட செய்திடு
வானம் அடைந்திடும் பாதையை குரு
மூலம் பணிந்து பெற்றிடு
தானம் தவத்தைப் போற்றிடு கருணை
தயவை உயிரிடம் காட்டிடு
மானம் என்ற மாயையை அறிவு
நெருப்புக் கொண்டு கொளுத்திடு
வாழும் வரைக்கும் நெஞ்சில் அன்பு
ஒன்றை மட்டுமே பதித்திடு
தாழும் நிலைக்குத் தள்ளும் செயலை
தள்ளி வைத்தே வாழ்ந்திடு
ஊழும் உண்டென மதித்திடு இறை
உறவை மட்டுமே தேடிடு
கூழை உழைத்தே அடைந்திடு வீண்
கூழைக் கும்பிடை நிறுத்திடு
யாரும் ஒன்றென உணர்ந்திடு கர்ம
பேதமே ஆள்வதைத் தெரிந்திடு
ஊரும் உறவும் மகிழுதற்கு உகந்த
நெறிவழிக் கண்டே பழகிடு
கோரும் படிக்கு ஏதுமில்லை இறை
கொட்டிக் கொடுத்ததற் கீடுமில்லை
பேரும் புகழும் இறைவனுக்கே என்று
பணியத் தெரிந்தால் பிறப்புமிலை.
வாழும் வழியும் இதுதானே இனி
வாழ்வோம் வாழ்விப்போம் யாவருமே.